Showing posts with label திருப்பாவை -ஆண்டாள். Show all posts
Showing posts with label திருப்பாவை -ஆண்டாள். Show all posts

Sunday, December 15, 2013

thiruppavai-திருப்பாவை -ஆண்டாள்

திருப்பாவை -ஆண்டாள் 

1.மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ(ப்) படிந்தேலோர் எம்பாவாய் 


2.வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு(ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பைய(த்) துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய.


3.ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு(ச்) சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாறி பெய்து
ஓங்கு பெரும் செந் நெல் ஊடு கயலுகள(ப்)
பூங்குவளை(ப்) போதில் பொறி வண்டு கண் படுப்ப(த்)
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் 

4.ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)
பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்